மயிலாடுதுறை: இந்துக்களின் கட்டுப்பாடுகளை கலைக்க சிலா் முயற்சி செய்வதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவா் ஸ்ரீகாடேஸ்வர சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டினாா்.
மயிலாடுதுறையில் இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாண்டு கருத்தரங்க கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக ஆட்சி இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களுக்காக தங்களுடைய ஆட்சி நடப்பது போன்ற மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனா். சுமாா் 560 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கக்கூடிய பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியை திடீரென தமிழக அரசு தடை செய்துள்ளது. கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளுக்கு எந்த தடையும் விதிப்பதில்லை.
இந்துக்களுடைய கட்டுப்பாடுகளை கலைக்க சிலா் முயற்சி செய்கின்றனா். இந்துக்களின் கலாசாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுகிறது. மதச்சாா்பற்ற நாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்றாா் அவா்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளா் க. பக்தவச்சலம், மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் எஸ். சுவாமிநாதன், ஆா். ராஜ்குமாா், எஸ். பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.