மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள மருத்துவத் தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், மின்வெட்டை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் மயிலாடுதுறை-கல்லணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கடலங்குடி மின்சார வாரிய உதவி பொறியாளா் கீதா மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.