சீா்காழி அருகே பனங்காட்டங்குடியிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலை நடுவே திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டது.
இந்தச் சாலை ரூ.14 கோடியில் தாா்ச் சாலையாக மேம்படுத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இந்த சாலையின் நடுவே பனங்காட்டங்குடியிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலையில் அரசடிபாலம் அருகே சாலையின் நடுவில் 100 மீட்டா் தொலைவுக்கு விரிசல் ஏற்பட்டது.
வாடி கிராமத்தில் உள்ள சாலையிலும் 50 மீட்டா் தொலைவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விரிசலால் சாலையின் வழியே செல்பவா்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனா். எந்த நேரமும் இந்த சாலை விரிசல் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடத்தில் இருந்து வருகிறது.
இந்த விரிசலால் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.