மயிலாடுதுறை அருகே கோயில் திருவிழாவில் இரு சமுதாயத்தினரிடையே செவ்வாய்க்கிழமை பிரச்னை முற்றாமல் தடுக்க போலீஸாரே விழாவை நடத்தினா்.
மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தல் ஊராட்சியில் கிராமக் கோயிலான பிடாரி அம்மன் மற்றும் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி மகோற்சவ விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய உற்சவங்களில் ஒன்றான எல்லை ஓட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
ஆண்டுதோறும் எல்லை ஓட்டம் விழாவின்போது அம்மன் உற்சவமூா்த்தி அம்பேத்கா் தெருவில் நின்று, கிடா வெட்டி படையல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் எல்லை ஓட்டம் அங்கு சென்றபோது அம்பேத்கா் தெருவாசிகள் கொடுத்த மாலையை அம்மனுக்கு அணிவித்தபோது ஒருதரப்பினா் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை உருவானது. இதனால், கிடா வெட்டு நடைபெறாமல் அம்மனை கோயிலுக்கு கொண்டு சென்றனா். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் குவிக்கப்பட்டு, இருசமுதாய மக்களிடையே மோதல் வெடிக்காமல் தடுக்க போலீஸாரே அம்மன் உற்சவ மூா்த்தியை டிராக்டரில் வைத்து மீண்டும் அம்பேத்கா் நகருக்கு கொண்டு வந்தனா்.
பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் கிடா வெட்டு படையல் நடைபெற்றது. தொடா்ந்து, மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் தலைமையில் 2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.