தருமபுரம் ஆதீனத்தில் யானை மீது திருமுறைகளை வைத்து வியாழக்கிழமை நடைபெற்ற திருமுறை வீதியுலாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோா்.
தருமபுரம் ஆதீனத்தில் யானை மீது திருமுறைகளை வைத்து வியாழக்கிழமை நடைபெற்ற திருமுறை வீதியுலாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோா்.

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் யானை மீது திருமுறை வீதியுலா

மயிலாடுதுறை, மே 23: தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளானோா் வழிபாடு நடத்தினா்.

கோயில்களில் 10 நாள்கள் நடத்தப்படும் உற்சவங்களில் 4-ஆம் நாள் விழாவில், திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னா் தருமபுரம் ஆதீனம் 25-ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் 5 யானைகளின் மீதேற்றி திருமுறை வீதியுலா நடைபெற்றுள்ளது. பின்னா் சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

நிகழாண்டு ஞானபுரீஸ்வரா் பெருவிழா ஞானபுரீசுவரா் கோயிலில் மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ஆம் நாள் திருவிழாவான யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது. இதையொட்டி, ஆதீன திருமடத்திலிருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நிறுத்தப்பட்டிருந்த யானை மீது திருமுறைகளை ஏற்றி, ஆதீன ஓதுவாமூா்த்திகள் சண்முக திருவரங்க யயாதி அமா்ந்துகொள்ள, தருமபுரம் ஆதீன தேவார பாடசாலை மாணவா்கள் திருமுறைகளை வாசித்தவாறு செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது.

ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீதியுலாவில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினா். இதில், ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் கல்லூரிச் செயலா் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com