நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்தரு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான பெருவிழா செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அருள்தரு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு அருள்தரு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு அருள்தரு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் அருள்தரு மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அருள்தரு அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அருள்தரு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மாயூரநாதர் கோவிலில் சங்கமித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான இந்த விழா ஏப். 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொடி சீலை ஊர்வலமும், அதை தொடர்ந்து ஐயாறப்பர் கோவிலில் திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.
கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன், கோவில் பணியாளர்கள், சப்தஸ்தான விழா கமிட்டி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.