ஒரே சீரான கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் அ.மகாவிக்னேஷ் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு நிர்வாகி துரை.அருள்ராஜன், ஒன்றியத் தலைவர் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக் கல்வி 2016-க்கான கொள்கை முன்மொழிவுகளைத் திரும்பப் பெறவேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கின்ற அதிகாரத்தை தனியார் நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது.
பொறியியல் மாணவர் லெனின் மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனம், வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்று நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் தாய்மொழியில் கட்டாய இலவசக்கல்வி வழங்க வேண்டும்.
மன்னார்குடியில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். கல்லூரி முதல்வர், பேராசிரியர், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் விஸ்வஜித்குமார், மாநிலச் செயலர் சி.தினேஷ் கலந்துகொண்டனர்.
அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் (மன்னார்குடி) அ.முருகானந்தம், பொன்.இளங்கோவன்,(திருவாரூர்), பி.ராஜாராமன், இளைஞர் மன்ற மாவட்டச் செயலர் பெ.முருகேசு, மாவட்டத் தலைவர் எம்.ஏ.முகமதுஹசன்பசரி, ஒன்றியச் செயலர் எஸ்.பாப்பையன், மாணவர் மன்ற மாவட்டச் செயலர் சு.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.