நாகை மாவட்டம், கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்து காயமடைந்த அரியவகை பெண் வெளிமான் திங்கள்கிழமை மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரியவகை வெளிமான்கள் அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், புள்ளிமான், குதிரை, குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
வறட்சியின் காரணமாக சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகள் தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் நீர்நிலைகளைத் தேடிவருகின்றன. இவ்வாறு வரும்போது, வாகனங்கள் மோதியும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், வனப் பகுதியைவிட்டு கோடியக்கரை படகுதுறை பகுதிக்கு வந்த 8 வயதுடைய பெண் வெளிமான் ஒன்று, சித்தர் கோயில் பகுதியில் நாய்களிடம் சிக்கி காயமடைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவரின் உதவியோடு சிகிச்சையளித்து வருகின்றனர். காயம் குணமடைந்ததும் மானை வனப்பகுதிக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.