செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
நரசிங்கநத்தம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சாலைகள், வீடுகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களும் பாதிப்படைந்துள்ளன.
சேதங்கள் குறித்து அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து பார்வையிட்டனர். ஆனால், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றித் தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும்.
பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும். 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.