கழுமலையாறு பாசன வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சீர்காழி வட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதியளிக்கும் கழுமலையாறு மற்றும் அதன் பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை இரவு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கழுமலையாற்றை முழுமையாக தூர்வாரவும், சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், கழுமலையாறு மற்றும் அதன் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கோவி. நடராஜன், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.