நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் தர்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
பாப்பாகோவில் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான கந்தூரி விழா அக். 1 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தொடங்கியது.
முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு, மீண்டும் தர்காவுக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. பின்னர் தர்காவை மூன்று முறை வலம் வந்தபின், சந்தனக்கூடு தர்காவினுள் எடுத்துச் செல்லப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோர் பங்கேற்றனர்.