மன்னார்குடியை அடுத்த வடுவூர் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை நடத்தினர்.
இப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட வார விழாவையொட்டி, வடுவூர் அக்ரஹாரம் ஊராட்சி விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.கோவிந்தராஜ் தலைமை விகித்தார்.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஊராட்சிக்கு உள்பட்ட 15 தெருக்களின் வழியாகச் சென்றது. அதில் பங்கேற்றோர், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு வழங்கியும் சென்றனர். மன்னார்குடி பிரதானசாலை, தந்தை பெரியார் சிலையருகே பேரணி நிறைவடைந்தது.
வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் அ.ஜூலியெட் ஜெயசிந்தாள், வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெ.தினேஷ் ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறிகள், முன் எச்சரிக்கை தடுப்பு முறைகள், நோய் தாக்கியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ். திட்ட முகாம் அலுவலர் கே.ரவிசங்கர், உதவி திட்ட அலுவலர்கள் இ.தமிழழகன், டி.தங்கதுரை, சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.