கோயில் இடிப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது
நாகை, காடம்பாடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாகை, காடம்பாடி சொக்கநாதர் கோயில் தெருவில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே வீரசொக்கநாத விநாயகர் கோயில் கட்டும் பணி, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கோயில் கட்டப்படும் இடம், அரசுக்குச் சொந்தமானது எனவும், அந்த இடத்தில் கோயில் அமைக்கக் கூடாது எனவும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமாக கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாகை வட்டாட்சியர் ராகவன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அந்த கோயிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் நாகை, காடம்பாடி பப்ளிக் ஆபீஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகள் நடத்தியப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் செழியன் தலைமை வகித்தார். போராட்டம் காரணமாக நாகூர்-நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இப்போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.