நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கூரை வீட்டை சீரமைத்தபோது, மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அண்ணாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜன் (55). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களது கூரை வீட்டில் பழுதடைந்ததால், மழைநீர் ஒழுகாமல் இருக்க பாலித்தீன் பாய் விரித்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில், காற்றில் கிழிந்த பாலித்தீன் தாளை சரிசெய்வதற்காக தர்மராஜன் வீட்டின் மீது ஏறி நின்று அதை சீரமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் மேல்பகுதியில் படர்ந்து காணப்பட்ட புளிய மரக்கிளைகளையும் சரிசெய்துள்ளார். இந்நிலையில், புளிய மரக்கிளையுடன் அப்பகுதி வழியே செல்லும் மின்கம்பி சேர்ந்திருந்ததால், மின்சாரம் பாய்ந்து தர்மராஜ் தூக்கி வீசப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.