சீர்காழி அருகேயுள்ள தென்பயில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சீர்காழி நகராட்சியில் தென்பாதி, கீழதென்பாதி, தாடாளன்கோவில், ரயில்வே சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பனமங்களம், திருக்கோலக்கா, வி.என்.பி. நகர், எம்.ஜி.ஓ நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 24 வார்டுகள் உள்ளன.
சீர்காழி பகுதியில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவி நீராகவும் இருப்பதால் சீர்காழி நகர் மக்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி அருகேயுள்ள சித்தமல்லி என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு சீர்காழி நகராட்சி வளாகத்தில் உள்ள நீர்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி சுத்திகரிக்கப்பட்டு 24 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சீர்காழி நகரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாயில் வி.என்.பி. நகரில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாள்களாக குடிநீர் நீண்ட தூரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.