நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 26) நடைபெறுகிறது.
சப்த விடங்கர் தலங்களில் ஒன்றான வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாகக் கூறப்படுவதும், மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறந்தததும் சிறப்புக்குரியது. அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சிக் கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இது திகழ்கிறது.
தேரோட்டத்துக்கு சிறப்பு பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத்தேர்களும் பழுதாகி அழிந்துபோனதால், கடந்த 60 ஆண்டுகளாகத் தேரோட்டம் தடைபட்டிருந்தது. தமிழக அரசு அளித்த நிதியோடு, கோயில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டில் புதிய தேர் செய்யப்பட்டு, மாசிமகப் பெருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது.
நிகழாண்டு, மாசிமகப் பெருவிழாவையொட்டி, ஸ்ரீ ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியகராஜசுவாமி எழுந்தருள, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 -க்குள் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியோடு தேரோட்டம் தொடங்கவுள்ளது.