சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி நடைபெற்றது.
கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் நக்கீரன் வரவேற்றார். ஒன்றியப் பொறியாளர்கள் தாரா, அருமைநாதன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர் கலந்துகொண்டு, கடந்த 2016-17 -ஆம் ஆண்டுக்கு கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 1,643 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், திருமலைக்கண்ணன், கோவிந்தராஜ், அருள்மொழி, சுலோச்சனா மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.