ஒக்கி புயல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒக்கி புயல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த தரங்கம்பாடி வட்டம், குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர் கோ. சஞ்சிக்கண்ணு என்பவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மீன்வளத் துறை இணை இயக்குநர் ரீனா செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மரபணு சோதனை முடிவுப்படி: மீன்பிடித் தொழிலாளரான கோ. சஞ்சிக்கண்ணு (45), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, ஒக்கி புயல் சீற்றத்தில் சிக்கி காணமால் போனார். புயல் சீற்றத்தில் சிக்கி கரை ஒதுங்கிய சடலங்களில் ஒரு சடலம் கோ. சஞ்சிக்கண்ணுவின் சடலம் என்பது, அவரது மகன் ச. விஷ்வாவிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் உறுதியானது. இதையடுத்து, சஞ்சிக்கண்ணுவின் சடலம் கடந்த 7 -ஆம் தேதி அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மரபணு சோதனை முடிவுப்படி சஞ்சிக்கண்ணுவின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கப்பட்டது.