நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள இளையாளூர் கிராமத்தில், வடகரை நெடுஞ்சாலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறிந்துவிழும் அபாய நிலையில் இருந்த தூங்குவாகை மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி, கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ. 15) கரையைக் கடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இளையாளூர் கிராமத்தில் புயலால் சாலையோரம் உள்ள தூங்கு வாகை மரக்கிளைகள் முறிந்து விழும் ஆபத்து நேரிடுவதாகவும், எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதன் கிளைகளை அகற்றக்கோரி, வடகரை ஜமாஅத்தார்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார் ஆகியோரது முன்னிலையில் மரக்கிளைகளை செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
பணியின்போது மின்தடை ஏற்படுத்தி, மின்கம்பிகளை கீழிறக்கி, மின்வாரிய ஊழியர்கள் உதவிபுரிந்தனர். வடகரை ஜமாஅத்தைச் சேர்ந்த முகம்மது ஃபாரூக், கனி, ரபீக், அஸ்ரப் அலி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.