நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கஜா புயலால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாகுபடி முற்றிலும் சேதமடைந்ததால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கிடாரங்கொண்டான், கீழையூர், பொன்செய், முடிகண்டநல்லூர், மேலப்பாதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. கஜா புயலால் ஒட்டுமொத்த வாழை சாகுபடியும் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் கூறியது:
கிடாரங்கொண்டான் பகுதியில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து பயிரப்பட்ட 2 ஆயிரம் வாழை மரங்களும் கஜா புயலில் முறிந்து விழுந்துவிட்டன.
பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்ய வேண்டி, தார் போட்டிருந்த நிலையில் வாழை மரங்கள் முற்றிலும் அடியோடு சாய்ந்துவிட்டன. தகுந்த நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்கினால்தான் பாதிப்பிலிருந்து மீளமுடியும் என்றார் அவர்.