கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லிட்டர் மண்ணெண்ணெய், 50 கிலோ அரிசி ஆகியவற்றை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தேசிய பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசியும், 1 லிட்டர் மண்ணெண்ணெயும் இலவசமாக வழங்கி வருவது போதுமானதாக இல்லை.
சமையல் எரிவாயு மற்றும் காய்ந்த விறகுகள் கிடைக்காத நிலையில், சமைக்க முடியாமலும், விளக்கு எரிக்க முடியாமலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லிட்டர் மண்ணெண்ணெய், 50 கிலோ அரிசி ஆகியவற்றை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என எம்.ஜி.கே. நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளார்.