நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஒன்றிய திமுக ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ஞானவேலன், ஒன்றிய முன்னாள் செயலர் மதிவாணன், அவைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் மாலிக் வரவேற்றார்.
கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் பேசியது:
கட்சியில் புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்க நாள்தோறும் ஊராட்சிகளில் அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். வருகிற 29 -ஆம் தேதி நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கொள்ளிடம் முக்கூட்டிலிருந்து பெருந்திரளாகச் சென்று வரவேற்று, அழைத்து வர வேண்டும். வாக்கு முகவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடிக்க வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கண்ணையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் சித்திக், தரங்கை பேரூர் செயலர் வெற்றிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.