நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, கருப்பம்புலம் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிற்றம்பலம் விநாயகர் கோயிலில், விநாயகர் சிலை நிறுவப்பட்டு ஒருவார காலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அதன்படி, வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஆதி ஆரோக்கியசாமி, கடிநெல்வயல் பங்குத்தந்தை ஆரோக்கியநாதன், தோப்புத்துறை ஜமாத் மன்றத்தைச் சேர்ந்த சுல்தான், சோட்டாபாய் ஆகியோர் பங்கேற்று, தேங்காய் உடைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். காங்கிரஸ் தேசியக்குழு உறுப்பினர் பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தார். தோப்புத்துறை மற்றும் கோடியக்கரை ஜமாத் மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.கே. கனகராஜ், மருதூர் கணேசன், அரசு மருத்துவர் அக்பர் அலி, ஐஎன்டியுசி தலைவர் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதான வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை, கருப்பம்புலம் வடக்குப் பகுதியில் உள்ள மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது. வழிநெடுகிலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.