நாகையை அடுத்த நாகூர் அருகே மணல் கடத்திச் சென்ற 2 கனரக வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் உத்தரவின் பேரில், நாகை மாவட்டத்தில் மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நாகையை அடுத்த நாகூர் காவல் சரகம், வெட்டாற்றுப் பாலம் அருகே தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு லாரி மற்றும் ஒரு டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனங்களின் ஓட்டுநர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், வேதாரண்யம், மறைஞாநல்லூர், அண்டர்காடு பகுதியைச் சேர்ந்த வீ. நடராஜன் (42), நாகூர், தெற்குபால்பண்ணைச்சேரியைச் சேர்ந்த என். அஜய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.