நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜேசீஸ் சங்கம், மயிலாடுதுறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஜேசீஸ் சங்கத் தலைவர் எம்.ஆர். மதிவாணன் தலைமை வகித்தார். செயலர் டி. சரவணன், திட்ட இயக்குநர் என்.கே. தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்தார். காவேரி நகரில் புறப்பட்ட பேரணி, காந்திஜி சாலை, மணிக்கூண்டு பட்டமங்கலத் தெரு, கால்டாக்ஸ் வழியாகச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
காவல் ஆய்வாளர் டில்லிபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர் பி. சண்முகவேல், மாயூரம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ். சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.