நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் சரகம் பகுதியில் பரிசுச் சீட்டு மூலம் மோசடி செய்ததாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திட்டச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட திருச்செங்காட்டாங்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (40). இவர், திட்டச் சேரி காவல் நிலையத்தில் தன்னை பரிசுச் சீட்டு மூலம் 2 பேர் மோசடி செய்ததாக அளித்த புகார் விவரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த பண்டாரம் மகன் பாலமுருகன் (25), செங்கோட்டையைச் சேர்ந்த திருமலை மகன் சரவணன் (25) ஆகிய இருவரும் தன்னுடைய வீட்டுக்கு வந்து சுரண்டல் சீட்டு கொடுத்து பரிசு விழுந்துள்ளதாக கூறி மிக்சி, குக்கர் மற்றும் எரிவாயு அடுப்பு ஆகியவற்றை கொடுத்து விட்டு மொத்த மதிப்பு ரூ. 8400 எனவும், தள்ளுபடி விலை ரூ. 4500 எனவும் கூறி, தொலைபேசி எண்ணையும் வாங்கிச் சென்றனர்.
பின்னர், என்னை தொடர்பு கொண்டு ரூ. 1 லட்சத்துக்கான பரிசு விழுந்துள்ளதாகவும், அதற்கு முன்பணமாக ரூ. 19 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும், மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 10 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறினர். அதன்பேரில் ரூ. 29 ஆயிரம் கொடுத்தேன்.
ஆனால், எந்த வித பொருள்களும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின்பேரில், போலீஸார் திருமருகல் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பாலமுருகன், சரவணன் ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.