மக்களவைத் தேர்தலில் வி.சி.க., தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு: உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தீர்மானம்

மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு

மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனர் ஜே. வின்சென்ட் மனோகரன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியது: "உழுபவனுக்கு நிலம் சொந்தம், உழைப்பவனுக்கு நாடு சொந்தம், உழைக்கும் விவசாயிக்கே அரசியல் அதிகாரம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து, தலித்துகளைப் பெருவாரியாக உள்ளடக்கிய உழைக்கும் விவசாயிகள் இயக்கம், கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மத்தியில் மீண்டும் அரசு அமைக்க முயலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை. மக்களின் சமூக விடுதலை, சமூக நீதி, வாழ்வுரிமை மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கும் இத்தேர்தலில் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, இயக்கத்தின் மாநில அமைப்பாளர் எம். கதிர்வேலு, இயக்க முன்னோடி சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், வழக்குரைஞர் ஏ. சங்கமித்திரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com