மக்களவைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னர், தேர்தல் ஆணைய உத்தரவை மீறி பிரசாரம் மேற்கொண்டால், தொடர்புடையோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான
சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல். 16) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பிரசார நிறைவுக்குப் பின்னர், சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொருளையும் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தக் கூடாது. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது.
அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதி அனைத்தும் செவ்வாய்க்கிழமை மாலைக்குப் பின்னர் செல்லுபடியாகாது. வாக்குப் பதிவு நாளில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், தொண்டர்கள் பயன்பாட்டுக்காக மூன்று வாகனங்களுக்குத் தனியே அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வாக்குச் சாவடியிலிருந்து சுமார் 200 மீட்டருக்கு அப்பால் தற்காலிக அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இருப்பினும், அங்கு கூட்டம் கூட்டவும், உணவுப் பண்டங்கள் பரிமாறவும் அனுமதிக்கப்படாது. இந்த உத்தரவை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.