குவைத் நாட்டில் சாலை விபத்தில் இறந்துபோன தனது கணவரின் சடலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தார்.
மயிலாடுதுறை வட்டம், கீழ பட்டமங்கலம், தெற்கு தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் அன்புராஜ் (26). திருமணமானவர். இவர் கடந்த 4 மாத காலமாக குவைத் நாட்டில் உள்ள ஓர் உணவகத்தில் வேலை பார்த்து வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை குவைத் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் அன்புராஜ் இறந்து விட்டதாக உணவகத்தின் உரிமையாளர் கலித் என்பவர் அன்புராஜின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அன்புராஜின் மனைவி ஏ.கெளதமி தனது 2 குழந்தைகளுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, குவைத் நாட்டில் இறந்துபோன தனது கணவரின் சடலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்துள்ளார்.