திருமருகல் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி முன்னிலை வகித்தார். திருமருகல் வட்டத்துக்குள்பட்ட 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளைக் கொண்டு 4 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. 51 மாணவர்கள், 54 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்கள், மாவட்டப் போட்டிக்குத் தகுதிப் பெறுவர் எனக் குறிப்பிடப்பட்டது. கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.