மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, வங்கிக் கடன் அளித்து அவற்றை மேம்படுத்த வேண்டும் என இந்திய தேசிய மாதர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் 21-ஆவது ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அருந்தவம்புலம் கிராமத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சி.தையல்நாயகி தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.மேகலா கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.எம்.டி.மகேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.செயராமன், மாதர் சம்மேளன நிர்வாகிகள் ஏ.லதா மலர்க்கொடி, ஜெயந்தி, பாக்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், கிராமபுறங்களில் குடிநீர் பிரச்னையைப் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.