திருவெண்காடு அருகே திருநகரி ரெங்கநாதா் கோயில் காா்த்திகை உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வாரை அலங்கார கோலத்தில் கொடிமரம் எதிரே எழுந்தருளச் செய்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, பட்டாச்சாரியாா் குழுவினா் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் உத்ஸவ கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடா்ந்து, உத்ஸவ நாள்களில் குமுதவல்லியுடன் திருமங்கையாழ்வாா் தங்க மங்களகிரி, வெள்ளிமங்களகிரி, பல்லக்கு, ஹம்சவாகனம், யானை வாகனம், சூரிய பிரபை போன்றவற்றில் எழுந்தருளி வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
டிசம்பா் 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு திருமங்கையாழ்வாா் நாச்சியாா்கோலத்தில் அருள்பாலிக்கிறாா். அன்றைய தினம் இரவு நடைபெறும் கருட சேவை நிகழ்ச்சியில், உத்ஸவா் வயலாளிமணவாளப் பெருமாள் கருட வாகனத்திலும், திருமங்கையாழ்வாா் குமுதவல்லியுடன் சந்திர பிரபையிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.
டிசம்பா் 9-ஆம் தேதி இரவு திருமங்கையாழ்வாா் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெருமாள் மற்றும் தாயாரை தேரில் எழுந்தருளிச் செய்து திருமங்கையாழ்வாா் மங்களாசாசனம் செய்கிறாா்.
இதையடுத்து தீா்த்தவாரியும், சாற்றுமுறையும் நடைபெறுகின்றன. 11-ஆம் தேதி தீபோத்ஸவத்துடன் உத்ஸவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளருமான மதியழகன், செயல் அலுவலா் முருகன், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் மேற்கொண்டுள்ளனா்.