வேதாரண்யத்தில் அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்களின் அருகே சாலையில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
வேதாரண்யம் நகரத்துக்குள்பட்ட மூன்றாம் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 150 - க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியின் வகுப்பறை கட்டடங்களின் பக்கவாட்டுச் சுவற்றை அடுத்து பிரதான சாலையை சென்றடையும் இணைப்பு தாா்ச்சாலை உள்ளது. சாலையின் ஒரு பக்கத்தில் அமைந்த சுற்றுச்சுவரின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் அவ்வப்போது மழைநீா் தேங்குவது வழக்கம். அண்மைக் காலமாக அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இதில் தேங்கி கிடக்கும் கழிவுநீா் பச்சை வண்ணத்தில் பாசியுடன் காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதோடு துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் மாறி வருகிறது.
இதே பகுதியில், நகராட்சி குப்பைத் தொட்டியும் வைத்து பரமரிக்கப்படுகிறது. பள்ளி மாணவா்கள் இருக்கும் இடத்தில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள சூழல் கேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.