நெய்யப்படாத கைப்பைகளைத் தவிர்த்து, மாசில்லா தமிழகம் அமைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, பாலிபுரப்லின் மற்றும் பாலிஎத்திலீனால் செய்யப்பட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) தடை செய்யப்பட்டவையே. பாலி புரப்லீனால் செய்யப்பட்ட (நெய்யப்படாதவை) கைப்பைகளின் அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பியல்கள் துணிப்பைகள் போலவே இருப்பதால், அந்தப் பைகளுக்குத் தடையில்லை என தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவிப்புப்படி, பாலிபுரப்லீனால் செய்யப்பட்ட பைகளும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளே ஆகும். எனவே, நெய்யப்படாத பைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் முழுமையாகத் தவிர்த்து, பாரம்பரிய சணல், துணி மற்றும் காகிதப் பைகளை மட்டும் பயன்படுத்தி, மாசில்லா தமிழகம் அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.