குத்தாலம் வட்டத்துக்கு உள்பட்ட மங்கநல்லூரில் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்- மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது மங்கநல்லூர் ரயில் நிலையம். இங்கு போதுமான அளவில் பயணிகள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தவில்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ரயில்கள் நின்று செல்வது தடை செய்யப்பட்டது.
மங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முகவர் பெரும்பாலும் பணியில் இல்லாத காரணத்தால், பயணிகள் பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பயணச்சீட்டு விற்பனையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே இந்த ரயில் நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தவில்லை எனக் கருதி, ரயில்கள் நின்று செல்வதை ரயில்வே நிர்வாகம் தடை செய்தது.
இதனால், மங்கநல்லூரை சுற்றியுள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்பட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மங்கநல்லூரில் மீண்டும் ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.