திருக்குவளை அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தருமையாதீனத்துக்குச் சொந்தமான கதகாரண்மாகிய திருக்குவளை அருள்மிகு தியாகராஜ சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ வண்டமரும்பூங்குழலம்மை உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் நெல் மகோத்ஸவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல் மகோத்ஸவத்தின் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து காலை 11மணிக்கு பஞ்சமூர்த்திகள் பிரம்ம தீர்த்தம் கொடுத்தருள்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை தியாகராஜப் பெருமானிடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவருள் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.