தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஜன. 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன நாகை மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கத்தில் ஜன. 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
ஆட்சிமொழி வரலாறு- சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.