திருக்குவளை, ஜூன் 13: திருக்குவளை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பயணிகள் நிழலகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திருக்குவளை கடைத்தெருவுக்கும், அரசு மருத்துவமனைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பேருந்து ஏறுவதற்காக அதிக அளவிலான பயணிகள் காத்திருக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமண மண்டபம், அஞ்சல் அலுவலகத்துக்கு வருபவர்கள், குறிப்பாக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த இல்லத்தைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அண்மை காலமாக இந்த பயணிகள் நிழலகம் முறையான பராமரிப்பின்றி சுவரொட்டிகளை ஒட்டுவது, கால்நடைகளை நிழலகத்தில் கட்டுவது, வீடு கட்ட பயன்படுத்தப்படும் மணல் மற்றும் செங்கற்களைக் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால், பயணிகள் நிற்கக் கூட இடமின்றி வெயிலில் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழலகத்தைச் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .