சீர்காழி கொள்ளிட முக்கூட்டுப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த மீண்டும் ஒருவழிப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சிதம்பரம் செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முன்பு சீர்காழி ரயில்வே சாலை (தாடாளன் தெற்கு வீதி), தாடாளன் மேலவீதி, வடக்கு வீதி, பள்ளிவாசல் வழியாக சிதம்பரம் சாலைக்குச் சென்றுவந்தன. இதேபோல், பனங்காட்டான்குடி மற்றும் சீர்காழி புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இதே வழித்தடத்தைப் பயன்படுத்தி கொள்ளிட முக்கூட்டுப் பகுதிக்கு வந்துசென்றன.
இந்நிலையில், இந்த ஒருவழிப் பாதையை போக்குவரத்து போலீஸார் நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில் சிற்றுந்துகளும் நிறுத்திவைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, முன்பு இருந்த ஒருவழிச்சாலை முறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், மேலும் ரயில்வே சாலை, தாடாளன் மேல வீதி சாலை பிரிவிலும், புழுகாப்பேட்டை சாலை பிரிவிலும் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும், கொள்ளிட முக்கூட்டுர் பகுதி, ரயில்வே சாலை, தாடாளன் மேலவீதி ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸாரை பணியமர்த்துவதோடு, விபத்துக்களை தடுக்கும் விதமாக போதிய எச்சரிக்கை சின்னங்களை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.