நாகை அபிதகுஜாம்பாள் உடனுறை அருள்மிகு அமரநந்தீசுவரசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவத்தின் ஒரு பகுதியாக வசந்தன் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற காயாரோகணசுவாமி திருக்கோயில் அருகே அமைந்துள்ளது அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரசுவாமி திருக்கோயில்.
இந்திரனின் சாபத்தை போக்கி மீண்டும் அரசாட்சி அருளிய தலமாக, இத்தலம் குறிப்பிடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும், பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா, கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்ச்சியாக தினமும் மாலையில் பஞ்சமூர்த்திகளாக சுவாமி- அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகிறது.
பிரமோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வசந்தன் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாளுக்கும், காலை 11 மணிக்கு தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு வசந்தன் உத்ஸவமாக தியாகராஜப் பெருமான் வசந்த திருநடனம் நடைபெற்றது.
விழாவின் வழக்கமான நிகழ்வாக, இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.