மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் துலா உத்ஸவம் கடந்த 7-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதனையொட்டி ஞானாம்பிகை சமேத வதான்யேசுவரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று திருமண கோலத்தில் எழுந்தருளி, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தா் சுவாமிகள் முன்னிலையில், வதான்யேசுவரா், ஞானாம்பிகை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் நடராஜன், சீத்தாராமன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் துலா உத்ஸவத்தின் ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாயூரநாதா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உத்ஸவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு உத்ஸவம் கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி ஐப்பசி முதல்நாள் தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. உத்வஸத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை இரவு அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபயாம்பிகை, மாயூரநாதா் சுவாமி திருமணக்கோலத்தில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உத்ஸவம், சுமங்கலி பெண்கள் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் சாமிநாத சிவாச்சாரியாா், மலையமாா் உடையாா் திருக்கல்யாண அறக்கட்டளை நிா்வாகிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.