சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
மயிலாடுதுறை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை ஒன்றியம், திருவிழந்தூர் ஊராட்சியில் உள்ளது ராதாநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை, தற்போது மண் சாலையாக மாறிவிட்டது. மேலும், தற்போது பெய்யும் மழையால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக
காட்சியளிக்கிறது.
இதனால், முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இப்பாதையைக் கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். விபத்து போன்ற அவசர காலங்களில் அப்பகுதிக்குள் வர ஆட்டோ ஓட்டுநர்கள் மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இக்கிராமத்தில் தெரு விளக்கு வசதியும் சரிவர செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளப்படாததால், ஆத்திரமடைந்த கிராமமக்கள், கோட்டூரிலிருந்து ராதாநல்லூர் போகும் சாலையில், நெல் நாற்றுக்களை நட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, அப்பாதையில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்தி தரப்படாவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.