தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை, மீன்வளத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து பொது ஏலத்தில் விற்பனை செய்தனர்.
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தக் கூடாது என மீன்வளத் துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும், நாகை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகை, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட சில பகுதிகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மீன்வளத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொடர்புடையப் பகுதிகளுக்கு காவல் துறை பாதுகாப்புடன் சென்ற மீன்வளத் துறை அலுவலர்கள், சுருக்குமடி வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களைப் பறிமுதல் செய்து, பொது ஏலத்தில் விற்பனை செய்தனர். சுமார் 11 டன் எடையிலான மத்தி மீன்கள் மீன்வளத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.40 லட்சத்துக்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. விற்பனைத் தொகை அரசு கருவூலத்தில் தொகை செலுத்தப்பட்டது.