பட்டம் பெறும் இளைஞர்கள் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்
பட்டம் பெறும் இளைஞர்கள் எதிர்கால சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தி. அறிவுடைநம்பி தெரிவித்தார்.
நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்ற அவர் மேலும் பேசியது :
நாகை உள்ளிட்ட 7 ஊர்களில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் விரைவில் அரசு கல்லூரிகளாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்கல்வி படிப்பதில் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது.
அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்வில் வெற்றி பெற வேண்டும். கற்கும் கல்வியானது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும். அதற்காக மாணவர்கள் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் 375 பேருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கல்லூரி துறைத் தலைவர்கள் சந்தானலெட்சுமி, ரஜினி, மதியரசன், ஜெயந்தி, சரஸ்வதி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.