இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் எம். பஹ்ருதின் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் பண்டிகையின்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், ஏராளமானோர் பலியானதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கூறுகிறது.
இலங்கையில் குண்டுவெடிப்புகள் ஓய்ந்துபோன நிலையில், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ என்று நினைக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பயங்கரவாத சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.