சீர்காழியை அடுத்த புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் லெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.காம், பி.எஸ்சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் போன்ற இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மே 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் நாள்கள் கல்லூரி அறிவிப்புப் பலகையிலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு அட்டையிலும் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் தங்களின் சாதிச் சான்றிதழ் நகலைக் கொடுத்துவிட்டு விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.