திருக்குவளை ஊராட்சிக்கு உள்பட்ட அரசு புறம்போக்கு குளங்கள் அனைத்தையும் அரசாணையில் சேர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
திருக்குவளையில் உள்ள 47 அரசு புறம்போக்கு குளங்களில் பெரும்பாலானவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அகையால், இப்பகுதி மக்களின் நலன் கருதி, தற்போது அரசு கணக்கில் இருக்கும் 24 குளங்களைத் தவிர்த்து மீதமுள்ள 23 புறம்போக்கு குளங்களையும் திருக்குவளை பஞ்சாயத்து கணக்கிலும், அரசாணையிலும் சேர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாவிடம் மனு அளித்துள்ளனர். மேலும், வியாழக்கிழமை (ஆக.15) நடைபெறும்
கிராமசபைக் கூட்டத்தில், இதன் மீது தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.