சுதந்திர தின விழாவையொட்டி, நாகை ரயில் நிலையத்தில் நடைபெற்ற காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுதந்திர தின விழாவையொட்டி, நாகை மாவட்டக் காவல் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன்படி, மாவட்டக் காவல் துறை சார்பில் நாகை ரயில் நிலையத்தில், ரயில் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறவும், உள் நுழையவும் அனுமதிக்கப்பட்டனர்.
இப்பணிகளை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் புதன்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார். நாகை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உடனிருந்தார்.