மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ரா. ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சி. செந்தில்வேல், மயிலாடுதுறை மூத்த குடிமக்கள் அவை தலைவர் டி.எஸ். தியாகராஜன், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி ப. கல்யாணம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் எம்.என். ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி, மங்கநல்லூர், மணல்மேடு, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் இருந்து மாவட்ட அமைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணத்தில் பெருந்திரளாக பங்கேற்ற முடிவு செய்யப்பட்டது.