திருக்குவளை அருகேயுள்ள அனக்குடி கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருக்குவளை வட்டம், அனக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவுக்குச் செல்லும் சாலையானது பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அத்துடன், தற்போது பெய்துவரும் மழையால் இந்தச் சாலையில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல், இருசக்கர வாகனத்தில் செல்வோா் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அவசர தேவைக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்தத் தெருவுக்குள் வரமுடியாமல், திருக்குவளை -சாட்டியக்குடி பிரதான சாலையிலேயே நிறுத்தவேண்டிய நிலையுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு நடந்துவரும் நிலை உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இந்தச் சாலையை மேம்படுத்தவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பழுதடைந்து நீா் தேங்கிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த ராதா ஜெயலட்சுமி கூறியதாவது:
எங்களது தெருவுக்குச் செல்லும் சாலையானது பழுதடைந்து படுமோசமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை . இதனால், முதற்கட்டமாக இந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இனியும் இந்தச் சாலையை சீரமைக்காமல் இருந்தால், வருகிற உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றாா்.